1.4. செய்திகளுக்கான ஏனைய தடயங்கள் (clues)


வாசிப்பு பரந்த அளவில் செய்தி எண்ணக்கருக்களுக்கு மிகவும் முக்கியமான மூலமாக இருப்பதுடன் உங்களது துறைசார் வல்லமை மற்றும் எழுத்து திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். உங்களது துறை தொடர்பில் நீங்கள் உண்மையான அர்ப்பணிப்பு கொண்டவரானால், வெளியிடப்பட்ட அனைத்தையும் வாசிப்பது உங்களது துறை சார் கடமையாவதுடன் புலனாய்வு ஊடகத்துறை தொழில்துறை போக்குக்கான அடிப்படையாக அமையும். வாசித்தல் இன்றி, ஊடகவியலாளர்கள் முறைமைகள் மற்றும் தொடர் செயற்பாடுகள் எவ்வாறு இயங்க வேண்டும் மற்றும் ஏதாவது பிழையாகப் போகும் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் சிறந்த புரிதலைப் பெற்றுக் கொள்ள முடியாது. உங்களை அடையும் தகவல்களை முறைமைப் படுத்துவதில் நேரத்தை செலவளிக்காது உங்களது அறிவுத்தளத்தை விரிவாக்கும் நோக்கில் புதிய தகவல்களை தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருக்க வேண்டும்.

புலனாய்வு நிருபர்கள் மற்றும் ஆசிரியர்கள் (IRE) அமைப்பின் முன்னைநாள் நிறைவேற்று இயக்குனர் பிரான்ட் ஹஸ்டன் IRE இன் புலானாய்வு நிருபர் கையேட்டில் உள்ளூர் செய்திப்பத்திரிகைகள் புலானைவுச் செய்திகளுக்கான அதிக வித்துக்களை கொண்டிருப்பதாக நினைவூட்டியுள்ளார். தண்டப்பணம் செலுத்தப்பட்ட அனைத்து சட்ட அறிவித்தல்களின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்துள்ளது. குறித்த சட்ட அறிவித்தல்கள் சாசனங்கள், பெயர் மாற்றங்கள், அறுதியீடுகள், ஏல விற்பனைகள், விலைமனுக் கோரல்கள், கையகப் படுத்தப்பட்ட சொத்துக்கள், அல்லது உரிமை கோரப்படாத சொத்துகள் தொடர்பானவையாக இருக்கலாம். உள்ளூர் பத்திரிகைகள் புதிய கட்டுமானப் பணிகள் பற்றிய அறிக்கைகள் அல்லது அரச திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீதிமன்ற வழக்குகள் பற்றிய சுவாரசியம் மிக்க விடயங்களைப் பிரசுரித்திருக்கும். இந்த பத்திரிகைகளில் மது போதையில் வாகனம் செலுத்திய உங்களது பாடசாலை பஸ் வண்டியின் சாரதியின் பெயர் அல்லது கடையில் திருடிய குற்றத்தில் தொடர்பு பட்ட நிதி அதிகாரி போன்ற விடயங்களைப் பெறலாம்.

பிரசுரிக்கப்பட்ட செய்திகளை ஊடகவியலாளர்கள் அடிக்கடி பின் தொடர்வதில்லை. வாசகர் தகவல் சேகரிப்பு மற்றும் கவனக் குவிவுக் கலந்துரையாடல்கள் வாசகர்கள் சம்பவம் ஒன்றின் தொடரான செய்திகளை விரும்புவதை எப்போதும் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்து என்ன நடக்கின்றது, அது ஏன் நடந்தது அல்லது நாளாந்த சுருக்கமான செய்திக் குறிப்பின் பின்னால் என்ன உள்ளது போன்ற விடயங்களை அவர்கள் அறிய விரும்புகின்றனர். ஏன் நடைபெற்றது என்ற விடயம் புறக்கணிக்கப்பட்ட செய்திகள் அல்லது விவாகரம் ஒன்றின் ஒரு விடயத்தில் மாத்திரம் குறுகிய அளவில் கவனக் குவிவைக் கொண்ட செய்திகளை விசேடமாகத் தேடுங்கள். அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெறும் உலகளாவிய அல்லது தேசிய நினைவு தினங்களை மாறுபட்ட வகையில் சமர்ப்பிக்கக் கூடிய வழிகளைத் தேடுங்கள்.

உத்தியோகபூர்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் சுவாரசியம் அற்றனவாகவும் வாசிக்க அதிக நேரம் எடுப்பனவாகவும் காணப்படும். அநேகமான ஊடகவியலாளர்கள் இவற்றை வாசிப்பது தமது நாளாந்த கடமைகளில் ஒன்றாகக் கருதுகிறார்களே அன்றி கிளர்ச்சி மிக்க செய்திகளின் மூலங்களாக அவற்றை நோக்குவதில்லை. எனினும் அவற்றை நீங்கள் கவனமாக வாசிக்கும் பொழுது உங்களால் அடிக்கடி புலனாய்வு விசாரணை ஒன்றை ஆரம்பிக்க தகுதி உள்ள புதிய மற்றும் சவால்மிக்க தகவல்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.

அருமை மிக்க வளங்கள் அல்லது புவியியல் அமைவு என்பன வெளிநாட்டு பதிப்புகள் மற்றும் இணையத்தளங்கள் மீதான அணுகலை மட்டுப்படுத்திய போதும் சமகால விடயங்களை அறியும் வகையில் புலனாய்வு ஊடகவியலாளர்கள் கிடைக்கும் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேறுபட்ட வெளிநாட்டுத் தூதுவரலாயங்களின் தகவல் வழங்கும் சேவைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன அனேகமாக இலவச வாசிப்பு அறைகள் அல்லது நூலகங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் அநேகமானவற்றில் இணைய வசதிகளும் காணப்படும். வேறு மாற்றீடுகள் இல்லாத நிலையில் ஊடகவியலாளர்கள் சாத்தியமான சந்தர்ப்பங்கள் அனைத்திலும் அவ்வாறான இடங்களுக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு இணைய வசதி அடிக்கடி கிடைக்குமாக இருந்தால் செய்தி இணையத்தளங்கள் மற்றும் முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலையமைப்புகளை நோக்குங்கள். அங்கு நீங்கள் நோக்குகள் மற்றும் முரண் நோக்குகள் என்பவற்றைக் காண்பீர்கள். டுவிட்டர் தளம் சமகால விவகாரங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் அடிப்படைத் தகவல்களை வழங்கும். ஏற்றுக்கொள்ளப்பட்ட மதி நுட்பம் விரைவாக மாற்றமடையும் சுகாதாரம் மற்றும் அறிவியியல் போன்ற துறைகளில் இது விசேடமாக முக்கியத்துவம் வாய்ந்தது. அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ரெட்ரோ வைரசை எதிர்க்கும் மருந்துகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள போதும் அபிவிருத்தி அடைந்து வரும் பிரதேசங்களில் உள்ள சில ஊடகவியலாளர்கள் இன்னும் எயிட்ஸ் நோய்க்கு வினைத்திறன் மிக்க சிகிச்சைகள் இல்லை என எழுதிக் கொண்டிருப்பார்கள். இந்த ஊடகவியலாளர்களுக்கு இந்த தகவலுக்கான அணுகல் கிடைக்கவில்லை, அத்துடன் இணையத்தை பாவிப்பதற்கான வசதிகள் கிடைக்காமல் இருந்திருக்கக் கூடும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சனை தொடர்பில் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகவியலாளர்கள் இந்த விடயத்தில் இருந்து தூரப்படுத்தப்பட்டுள்ளனர்: மக்களுக்கு இந்த மருந்தைப் பெறுவதற்கான உரிமை இருந்த போதும் பல்வேறு வழிவகைகளில் அது தடுக்கப்பட்டுள்ளது.